நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து...சென்னை வந்தடைந்த 17 பயணிகள்!

நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய ரயில் விபத்து...சென்னை வந்தடைந்த 17 பயணிகள்!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 17 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

ஒடிசாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டது.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட 131 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். மேலும், கூடுதலாக 2-வது சிறப்பு ரயில் மூலம் 17 பேர் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். 

முன்னதாக பயணிகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறையும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருந்தனர். சாய்வு நாற்காலி, முதலுதவி பெட்டி,  மருந்து பொருட்கள் ஆகியவற்றுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளை மீட்கும் பணியில் அரசு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர். 

பிற்பகல் 12 .45 மணி அளவில் சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை ஒன்றிற்கு வந்தடைந்தது. அப்போது, பயணிகளின் உறவினர்கள் நண்பர்கள் அவர்களை வரவேற்று உரிய இடங்களுக்கு அழைத்து சென்றனர். 

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக ஊர் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com