விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது... ஏற்பாடுகள் என்ன என்ன ?

வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது... ஏற்பாடுகள் என்ன என்ன ?
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா, பாமக சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிமுக, தேமுதிக, ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையே தொகுதியில் அரசியல் கட்சி தலைவா்களின் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

இதனையடுத்து, வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை காவல்துறையினா் துணையுடன் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com