பரவிவரும் மர்ம காய்ச்சல்...! பீதியில் பொதுமக்கள்..!

Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் 9-க்கு மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் விருதுநகர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மர்ம காய்ச்சல் குறித்து அப்பகுதி பொதுமக்களிடம்  விசாரித்தபோது, ஊராட்சி நிர்வாகம் சார்பில், முறையாக கழிவுநீர் வாருகால் சுத்தம் செய்யாமலும், ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் பிற நோய்கள் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாகவும், 

அதேபோல்  ஊரில் உள்ள கண்மாய் பகுதி அருகில்  பொது கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாலும்,  ஆங்காங்கே தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும், குப்பைகள்  முறையாக அப்புறப்படுத்தாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் உடனடியாக  உரிய கவனம் செலுத்தி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் அதேபோல் சுகாதாரத்துறை சார்பில், மருத்துவ முகாம் மாதம் இருமுறையாவது நடத்த வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com