திருச்செந்தூரில் தனியார் பேருந்து நடத்துநர் முகத்தில் கொதிக்க கொதிக்க டீயை ஊற்றிய அரசு பேருந்து ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பேருந்து ஊழியர்களை பதற்றத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து பார்க்கலாம் விரிவாக...
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இதனால் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில் ஜூன் 21-ம் தேதியன்று திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய இரண்டு அரசு பேருந்துகள் புறப்படும் நேரம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர்களிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது காயல்பட்டினம் பகுதியில் செல்லும் மினிபஸ்-சில் நடத்துநராக இருந்த சத்ரியன் என்பவர் இருவரது தகராறிலும் குறுக்கே நுழைந்தார். நீங்கள் இவ்வாறு தகராறு செய்வதினால் எங்கள் பேருந்தை இயக்க முடியவில்லை என கூறியவுடன், அரசு பேருந்து ஒட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் சேர்ந்து சத்ரியனை தாக்கினர்.
அப்போது பேருந்து நிலையத்துக்குள் டீ குடித்துக் கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநர் வேலவன் என்பவர், கொதிக்கும் தேநீரை சத்ரியனின் முகத்தில் ஊற்றினார்.
அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களிடமே வழிவிட சொல்கிறாயா என கேட்டதோடு, கண்ணாடி தம்பரை சத்ரியனின் முகத்திலும் வீசினார். இதில் காயமடைந்த சத்ரியன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் அரசு பேருந்து ஓட்டுநர் வேலவன் மற்றும் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மினிபஸ் ஊழியர்கள் மீது நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.