"எதிர்க்கட்சிகளை ED மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது" எம்பி. திருநாவுக்கரசர்!!

மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி  தலைவர் ராகுல்காந்தியை பத்து தலை ராவணன் போல் சித்தரித்து சமூக வலைதளத்தில் அவதூறாக விமர்சித்து வரும் பா.ஜ.க மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து உய்யகொண்டான் கரை குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்த காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டனர்.

ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு பா.ஜ.கவை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ராகுல் காந்தி பெயரை கூறவே பா.ஜ.க.வினர் பயப்படுகிறார்கள். அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெழுங்கான, மீசோரம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று பல்வேறு கருத்துப்கணிப்புகள் அறிவித்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் ராகுல்காந்தி மீது அவதூறு பரப்பி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்றவற்றின் மூலம் சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின் வெற்றி 2024-ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதிவி ஏற்பார்" என்றார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com