"ஆவின் நிறுவனம் அழிவுப் பாதைக்கு சென்று விடும் " - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

"ஆவின் நிறுவனம் அழிவுப் பாதைக்கு சென்று விடும் " - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.

கொள்முதல் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

`பசும்பாலுக்கான கொள்முதல் விலையை ரூபாய் 42 ஆகவும் பெருமை பாலுக்கான கொள்முதல் விலையை ரூபாய் 51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தரம் கூறுகையில்:-

தமிழ்நாட்டில் தற்போது அமுல் நிறுவனம் காலூன்ற தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், ஆவின் நிறுவனத்தை விட கூடுதலான கொள்முதல் விலையை அமுல் வழங்குவதாகவும் தனியார் பால் விற்பனை விலையை விட பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் அமல் நிர்வாகம் விற்பனை செய்வதையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

அதோடு, அரசியல் தலையீடு இல்லாத காரணத்தினாலேயே அமுல் நிர்வாகம் சிறந்த முறையில் செயலாற்றி வருவதாகவும் பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடி பண பட்டுவாடா செய்வதாகவும் சுந்தரம் தெரிவித்தார். 

மேலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக 12000 ஆக இருந்த ஆவின் கூட்டுறவு பால் சங்கங்களின் எண்ணிக்கை தற்பொழுது ஒன்பதாயிரமாக குறைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் சங்கத்தினர் ஆவின் நிறுவனத்தை காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

தொடர்ந்து, பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கா விட்டால் ஆவின் நிறுவனம் அழிவுப் பாதைக்கு சென்று விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com