
சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைத்தாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஆய்வு:
வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பொழிந்து வருவதால் சென்னை உள்ளிட்ட நிறைய மாவட்டங்கள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
நிவாரண உதவி வழங்க உத்தரவு:
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் ஒவ்வொருவருக்கும் நிவாரண உதவியாக ரூபாய் 1000 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
மேலும் கடும் மழையினால் சேதமடைந்த பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.