"இன்றைய இளைஞர்களிடம் வரலாறு சார்ந்த தேடல் இருக்கிறது"  திமுக செய்தி தொடர்பாளர் சல்மா...!! 

"இன்றைய இளைஞர்களிடம் வரலாறு சார்ந்த தேடல் இருக்கிறது"  திமுக செய்தி தொடர்பாளர் சல்மா...!! 

"இன்றைய இளைஞர்களிடம் வரலாறு சார்ந்த தேடல் இருக்கிறது" என திமுக செய்தி தொடர்பாளர் சல்மா தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2014-ஆம் ஆண்டு முதல் 'மரபு இடங்களின் நண்பர்கள்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பானது பழங்கால கலைகளையும், நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2021-ஆம் ஆண்டில் பாண்டிய நாடு என்ற பெயரிலும், 2022-ஆம் ஆண்டில் தென்பாண்டி நாடு என்ற பெயரிலும் கிளைகள் தொடங்கப்பட்டன. இந்த அமைப்பில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளார்கள். இந்தநிலையில் வடமாவட்டங்களில் மரபு சார்ந்த இடங்களை போற்றிப் பாதுகாக்கும்வகையில் "பல்லவர்" என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்பட்டது.

இதன் தொடக்க விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ் எழுத்தாளரும் திமுக செய்தி தொடர்பாளருமான சல்மா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 

அதனை தொடர்ந்து மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், தமிழர்களின் வரலாறு கட்டிடங்கள், கோவில்கள் அனைத்தும் தொன்மை வாய்ந்தது. இது குறித்து புரிதலை சமூகத்தில் எதிர்கால இளைஞர்களுக்கு கொண்டு செல்வது என்பது மிக அடிப்படையான தேவை எனவும், வரலாற்றை அறிவது என்பது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைப்பதற்கான முயற்சி என்றார்.  அதனால் தான் இன்றைக்கு கீழடியில் கண்டுபிடித்த மிகப் பெரிய அளவில் தமிழர்களின் வாழ்க்கை நாகரிகம் சிறப்பாக இருந்திருக்கிறது என்பதை இந்த தலைமுறைக்கு கொண்டு செல்வது பெரிய தூண்டுதலாக கீழடி இருந்து வருகிறது என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், மரபு இடங்களின் நண்பர்கள் என்ற அமைப்பை நடத்த பெண்கள் அனைவரும் இணைந்து இந்த முயற்சியை எடுத்து இருப்பது பெரும் பாராட்டுக்களுக்கு உரியது. மேலும், இது போன்ற சமூகம் சார்ந்த பங்களிப்பாளர்களும், அரசு சார்ந்த பங்களிப்பும் ஒன்றிணைந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.  

மேலும், வரலாற்றை அறிவது என்பது இன்று முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய இளைஞர்களிடம் வரலாறு சார்ந்த தேடல் இருக்கிறது என்று நினைக்கிறேன். கீழடி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மிகப் பெரிய தொல்லியல் சார்ந்த தேடல் பலருக்கு இன்று இருக்கிறது. சில படங்கள் வழியாக நம்முடைய சோழர்கள், பல்லவர்கள் வரலாறு குறித்து தெரியப்படுத்துகிறது. மேலும், அரசின் பல நிகழ்வுகள் பண்பாட்டை, கலாச்சாரத்தை, கலைகளை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் உள்ளது. எனவே அரசு பண்பாட்டு திருவிழா, கலைத் திருவிழா என்பதை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க:"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??