ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன..? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் இருந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு ஒடிசா விரைந்தது.
அங்கு விபத்து நடைபெற்ற பாலசோர் பகுதி மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதி தலைமையிலான அமைச்சர்கள் குழு சென்னை திரும்பியது.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்:
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்த கோர விபத்து வேதனை அளிப்பதாக கூறினார். அதே நேரத்தில், விபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன என்பது குறித்து எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் சிவசங்கர் உடனிருந்தார்.
இதனிடையே, ஒடிசாவில் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளதாகவும், மாயமானவர்கள் சக பயணிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாநில கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: காரணம் இதுதான் - அதிகாரிகள் விளக்கம்...!