க்ரைம்

காவி உடை அணிந்து சாமியார் நாடகம்...காருடன் மடக்கி பிடித்த போலீசார்..!

Tamil Selvi Selvakumar

வடலூரில் நூதன முறையில் பண மோசடி செய்த போலி சாமியார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

காவி உடையணிந்த மர்ம கும்பல்:

வடலூர் ஆபத்தான புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் வடலூர் பேருந்து நிலையத்தில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு காவி உடை அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளனர். அப்போது ஜோதிமணி  நீங்கள் யார் என்று கேட்க, அதற்கு அவர்கள் ஜோதிமணிக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு அன்னதானம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

முன்பணம் கேட்ட கும்பல்:

தொடர்ந்து, தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு 45 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் ஜோதிமணி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால், முன்பணம் கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஜோதிமணி கொடுத்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று கொண்ட அந்த கும்பல், அங்கிருந்து காரில் தப்பித்து சென்றுள்ளனர்.

போலீசில் புகார்:

இதனால் சந்தேகமடைந்த ஜோதிமணி, வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு, போலி சாமியார் சேகர் தலைமையிலான கும்பல் இதேபோன்று  பல பேரிடம் நூதன முறையில் மோசடி செய்தது தெரிய வந்தது.

கைதான போலி சாமியார்கள்:

இதையடுத்து, போலி சாமியார் சேகர், ரகுநாத், முருகன், ஜெகதீசன், சந்திரசேகரன் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.