க்ரைம்

“முகம் சிதைத்து கொல்லப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி” - பதுங்கியிருந்த இடத்தில் நடந்த சம்பவம்.. இரவோடு இரவாக வந்த மர்ம கும்பல் யார்?

ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுடைய லோகேஷ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருசக்கர வாகனத் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய லோகேஷ், பழைய வத்தலக்குண்டு ஓம் சக்தி கோவில் அருகே உள்ள பகுதியில் காவலர்களிடம் சிக்க கூடாது என சில நாட்களாக தலைமறைவாக பதுங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அந்த பகுதியில் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென லோகேஷை சுற்றி வளைத்தது வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் கொண்டு வந்த அரிவாளால் லோகேஷை சரமாரியாக வெட்டி விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர். இதில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த லோகேஷை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகேஷிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரில் விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், ஏற்கனவே நடந்த கொள்ளை சம்பவங்களில் ஏற்பட்ட பங்குப் பிரிப்பு தகராறின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் வேறு ஏதாவது சொந்த பிரச்சனை காரணமாக முன்பகை இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.