திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து, புளியம்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் 28 வயதுடைய பேபி. இவர் தற்போது காவல்துறையில் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த மாதம் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரது வீட்டில் இருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வைசரனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து புறநகர் DSP.(பொறுப்பு) குமரேசன் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் பேபி கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்த போது அதே கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினத்தை சேர்ந்த காவலர் வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
அதன் பிறகு பேபிக்கு வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வந்த நிலையில் வீரமணி அவருடன் பேசுவது குறைந்துள்ளது. தொடர்ந்து பேபி அவரை தொடர்புகொள்ள நினைத்தாலும் அவர் போன் எடுக்காமல் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் காவலர் வீரமணி கடந்த மாதம் வேறு ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார். வீரமணி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை அறிந்த பேபி அவரிடம் நேரில் சென்று கேட்ட போதும் எந்த பதிலும் கூறாமல் மௌனம் காத்துள்ளார். இதனால் வீரமணி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதை உணர்ந்த பேபி வேலைக்கு செல்லாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்னர் பேபியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து வேலைக்கு அனுப்பிய நிலையில் கடந்த மாதம் மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளான பேபி வீரமணி தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் சந்தோசமாக வாழ்வதை நினைத்து விரக்தியடைந்து வீட்டில் யாருமில்லாத நேரமாக பார்த்து தற்கொலைக்கு முயற்சி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் காவலர் வீரமணி மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.