க்ரைம்

2000 ரூபாய்க்காக இப்படியா? “கடனை திருப்பி கேட்டவர் 60 அடி பள்ளத்தில் தள்ளி கொலை” - கணவனுக்கு உடந்தையாக இருந்த மனைவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர் மனைவி அலமேலு.

Muthu Lakshmi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர் மனைவி அலமேலு. இவர் சங்கராபுரம்  பூட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் கடந்த மாதம் 24-ம் தேதி சங்கராபுரம் காவல் நிலையத்தில் எனது மனைவியை காணவில்லை என அவரது கணவர் பாஸ்கர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த ராஜாப்பா  என்பவர் இந்திரா நகர் பகுதியில் உள்ள அலமேலு என்பவரை கொலை செய்துவிட்டதாக சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்பு அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது உயிரிழந்த அலமேலுவிடம்  2000 ரூபாய் பணம் வாங்கியதாகவும், இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். அதையடுத்து கடந்த 23-ம் தேதி கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள வஞ்சிக்குழி கிராமத்தில் தனது நண்பர் இருப்பதாகவும், “உனக்கு தரவேண்டிய பணத்தை என் நண்பரிடம் வாங்கித் தருகிறேன்” என்று கூறி  இருசக்கர வாகனத்தில் அலமேலுவை அழைத்துச் சென்றுள்ளார் ராஜாப்பா. வஞ்சிக்குழி மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் -60 அடி பள்ளத்தில் இருந்து தள்ளி கொலை  செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு குற்றவாளி அழைத்துச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தை ராஜப்பா தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று கருதிய போலீசார், இதில் அவரது மனைவி சுகன்யா என்பவருக்கும் தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ராஜப்பாவின் மனைவி சுகன்யாவையும் கைது செய்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பெண்ணை கல்வராயன் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் கல்லால் அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி 60 அடி பள்ளத்தில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே இரண்டு நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், மேலும் இந்த கொலை வழக்கில் மூன்றாவதாக  சங்கராபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானாஸ் அவர்கள் வட பொன்பரப்பி காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து மூவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.