மும்பை வொர்லி நகரில் உள்ள பூங்காவில் அசிஸ்டென்ட் கமிஷ்னர் ஒருவர், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில், மும்பை காவல்துறை அவரை கைது செய்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, வோர்லி காவல்துறை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளது.
மும்பை காவல்துறையின் விசாரணையின்போது , வொர்லியில் உள்ள ஒரு பொதுப் பூங்காவில் 9 வயது சிறுமியிடம் ஆபாச செயல்களில் ஈடுபட்டது மற்றும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த உயர் அதிகாரி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
வொர்லி காவல் நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட அதே சிறுமி பகுதியை சேர்ந்த, வீட்டின் அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு விளையாடச் சென்றிருக்கிறாள். அந்த காவல் அதிகாரி சிறுமியை அணுகி, அவள் முன்னிலையில் தகாத செயல்களில் ஈடுபட்டு, தனது அந்தரங்க உறுப்புகளை தொடுமாறு அவளை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, தனது வீட்டிற்கு ஓடிச் சென்று, நடந்ததை தனது தாயிடம் விவரித்துள்ளார். வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் அந்த சிறுமியின் தாய், உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து விசாரணையைத் தொடங்குவதற்காக வொர்லி காவல்துறை ஒரு குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பியது. முதற்கட்ட விசாரணை மற்றும் சந்தேக நபரை அடையாளம் கண்டதன் அடிப்படையில், புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த அதிகாரியை கைது செய்தது காவல் துறை.
இதற்கிடையில், மற்றொரு சிறுவன் காவல்துறையை அணுகியது இந்த விசாரணையில் மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு, அதே அதிகாரி அந்த சிறுவனிடமும் இதே போன்ற முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக அவன் குற்றம் சாட்டினான். அதிகாரிகள் இந்த சாட்சியத்தை தங்கள் விசாரணையில் இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் இந்தக் கூடுதல் குற்றச்சாட்டுகளை சரிபார்க்க ஒரு தனி விசாரணையையும் நடத்தி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் 74 மற்றும் 79 பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை காவல்துறை அதிகாரி, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை வலியுறுத்தி, ஒரு கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இருப்பினும், சிங் கார்டனில் சிசிடிவி கண்காணிப்பு இல்லாதது புலனாய்வாளர்களுக்கு இந்த வழக்கிற்கு ஒரு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. இதனால், இந்த வழக்கு சாட்சி, வாக்குமூலங்கள் மற்றும் தடயவியல் சான்றுகளை சார்ந்தே உள்ளது.
நாக்பூரை பூர்வீகமாக கொண்ட அந்த அதிகாரி, நவம்பர் 2025 முதல் மும்பையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த அவர், சம்பவம் நடந்த நேரத்தில் வோர்லி காவல் முகாமில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது, முக்கிய பதவிகளில் உள்ள அதிகாரிகளின் பொறுப்பு, ஒழுக்கம், மேற்பார்வை மற்றும் செயல்திறன் குறித்த கடுமையான கவலைகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் இப்படிப்பட்ட குற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பையும், பொது இடங்களின் ஒழுக்க செயல்களையும் கண்காணிக்க வேண்டிய காவல்துறை அதிகாரியின் இத்தகைய செயல் பெரும் கண்டனத்திற்குரியதாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருவதாக மும்பை காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்