கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வடக்கு பகுதியில் உள்ள சிக்கபனவரா பகுதியில் 34 வயது ஆண் மற்றும் அவரது 5 வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமான மரணமாக கருதப்பட்ட இந்த வழக்கு, காவல்துறை விசாரணையில் இரட்டை கொலை சம்பவமாக தெரிவித்துள்ளது காவல்துறை.
உயிரிழந்தவர் அபிநந்தன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் அவரது 5 வயது மகன் யதுவீரும் உயிரிழந்த நிலையில் வீட்டில் இருந்து மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அபிநந்தனின் மனைவி ஹரினியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல்துறையின் விசாரணையில், தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தனித்தனி அறைகளுக்கு உறங்க சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பிறகு, ஹரினி அவரது காதலன் என கூறப்படும் வினயை வீட்டிற்கு வரவழைத்து தெரியவந்துள்ளது. வீட்டிற்கு வந்த வினயுடன் சேர்ந்து, கணவர் அபிநந்தனை தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த 5 வயது மகன் யதுவீர் கண்விழித்து நடந்ததை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கொலை வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், சிறுவனையும் தலையணையால் முகத்தில் அழுத்தி மூச்சுத்திணறல் ஏற்படுத்தி கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த பிறகு, வீட்டில் இருந்த இரத்தக் கறைகள் மற்றும் பிற தடயங்களை அழிக்க முயற்சி செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவும் திட்டமிட்ட சதிக்கான முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் மனைவி ஹரினி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன் வினய் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க பெங்களூரு மற்றும் கனகபுரா அருகே உள்ள ஹெரோஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த அபிநந்தன் மற்றும் அவரது மகன் யதுவீரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குடும்பத் தகராறு, கணவர் மற்றும் பச்சிளம் குழந்தையின் உயிரை பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினய் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.