சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்ததாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்திற்கு பென்டிரைவ் ஒன்றை கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸார் அந்த பென்டிரைவில் இருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் வயதான நபர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சி இடம்பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வீடியோவில் இடம்பெற்றிருந்த நபர் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணையை தொடங்கினர்.
வீடியோவில் இருந்தவர் தொழிலதிபர் வீரமணியா?
போலீஸாரின் விசாரணையில், வீடியோவில் இடம்பெற்றிருந்த வயதான நபர் பிரபல கிரானைட் தொழிலதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான 84 வயதுடைய வீரமணி என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேனாம்பேட்டை பகுதியில் வீரமணி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்ததாகவும், அந்த வீட்டின் நிர்வாக பொறுப்புகளை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்படைத்திருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அந்த வீட்டிற்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும், மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களிடம் சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிக்கிய முக்கிய ஆதாரங்கள்
இதனைத் தொடர்ந்து வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வழக்குடன் தொடர்புடையதாக கருதப்படும் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வீரமணி, சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் என்பதால், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்