ஈரோடு மாவட்டம், பிராமண பெரிய அக்ரஹாரம் அருகே திருமணமான இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய உறவினர்கள், அவருடன் பழகி வந்ததாக கூறப்படும் இளைஞரை கைது செய்ய வலியுறுத்தி பவானி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு, பிராமண பெரிய அக்ரஹாரம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகுணா என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சுகுணாவுக்கும் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த தவ்பிக் என்ற இளைஞருக்கும் சில ஆண்டுகளாக திருமணத்திற்கு மீறிய பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அக்ரஹாரம் காட்டூர் பகுதியில் தவ்பிக் வசித்து வரும் வீட்டின் அருகே சுகுணா நேற்று முன்தினம் காலை (ஆக 26) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுணாவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுகுணா கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள், சுகுணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், சுகுணாவுடன் பழகி வந்ததாக கூறப்படும் தவ்பிக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர் கைது செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து காவல்துறை தங்களிடம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சுகுணாவின் உறவினர்கள் பவானி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.