

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தில் சொத்து தகராறில் பாலகிருஷ்ணன் (60) என்பவர் கட்டையால் அடித்துக் கொலை-அண்ணன் மனைவி வெறிச்செயல்- மேலும் கொலை செய்த பொன்னம்மாள் தப்பி ஓட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60). இவர் பிளம்பர் வேலை சித்து வருகிறார். இவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் (66) இவரது மனைவி பொன்னம்மாள் வயது (63). பாலகிருஷ்ணனுக்கும் அவரது அண்ணன் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலையில் பாலகிருஷ்ணன் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தெருவில் நின்று கொண்டிருந்த இறந்த அவரின் அண்ணன் மனைவி பொன்னம்மாள் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பொன்னம்மாள் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தனது கொழுந்தன் (கணவரின் தம்பி) என்றும் பாராமல் பாலகிருஷ்ணன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பாலகிருஷ்ணன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காமல் பொன்னம்மாள் சரமாரியாக அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அங்கு நின்றிருந்தவர்கள் விரைந்து வந்து பொன்னம்மாளை தடுத்துள்ளனர். அவரை சரமாரியாக தாக்கி விட்டு பொன்னம்மாள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தொடர்ந்து படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலகிருஷ்ணனை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்
இதற்கிடையில் பாலகிருஷ்ணனின் மகன் மனோஜ் குமார் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பொன்னம்மாள் மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், உயிரிழப்புக்கு பின் போலீசார் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாகிய பொன்னம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். பொன்னம்மாளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு தங்க ரத்தினம் என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். சொத்து தகராறு பிரச்சனையில் அண்ணனின் மனைவியே, கொழுந்தனை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.