கள்ள உறவு தெரியவந்ததன் தொடர்பாக ஏற்பட்ட குடும்பச் சண்டையைத் தொடர்ந்து, கணவரைப் படுக்கையில் கட்டிப்போட்டுத் தீ வைத்துக் கொளுத்தியதாகக் கூறப்படும் பெண்ணும், அவரது கள்ளகாதலனையும் போலீசார் சித்தார்த்நகர் மாவட்டத்தில் கைது செய்துள்ளனர்.
துமரியாகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரேஹ்ரா கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில், லால்ஜி கௌதம் (28) என அடையாளம் காணப்பட்டவர், 40 சதவீத கடுமையான தீக்காயங்களுடன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை லால்ஜியின் மனைவி பூஜா கௌதம் (27) மற்றும் அவரது கள்ளக்காதலன் என்று கூறப்படும் ஃபெரோஸ் (29) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணையில், பூஜா கௌதம் சில ஆண்டுகளுக்கு முன்பு லால்ஜியைத் திருமணம் செய்துள்ளார். மேலும் இந்தத் தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். விசாரணையின் போது, பூஜாவுடன் கள்ளஉறவில் இருந்த ஃபெரோஸும் திருமணமானவர் என்றும் அவர் மூன்று குழந்தைகளின் தந்தை என்றும் தெரியவந்துள்ளது. லால்ஜியை விட ஃபெரோஸ் பொருளாதார ரீதியாக சிறந்த நிலையில் இருந்ததாகவும், அவரது கணவரை விட கணிசமாக அதிகமாகவே சம்பாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதுவே பூஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்ததற்கான காரணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துமரியகஞ்ச் வட்ட அதிகாரி ராகேஷ் வர்மா கூறுகையில், பூஜா, ஃபெரோஸைத் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு உறவினர் என்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால், எந்தவித சந்தேகமும் ஏற்படாமல் அவரை வீட்டிற்கு அழைத்து வந்ததாக விசாரணையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், மே 21 அன்று, ஃபெரோஸ் பூஜாவின் உறவினர் அல்ல, மாறாக அவரது கள்ளக் காதலன் என்பதை பூஜாவின் கணவர் லால்ஜி கண்டுபிடித்துள்ளார். இதனை அடுத்து குடும்பத்திற்குள் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வீட்டிற்குள் கடும் வாக்குவாதம் வெடித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். விசாரணையின்படி, பூஜா மற்றும் ஃபெரோஸ் ஆகியோர் லால்ஜியை ஒரு படுக்கையில் கட்டிப்போட்டு, அவர் மீது பெட்ரோலியம் சார்ந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி, அவரைக் கொல்லும் முயற்சியில் தீ வைத்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்குப் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, அவர் ஆரம்பத்தில் உள்ளூர் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். லால்ஜிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து தீவிர மருத்துவப் பராமரிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீக்காயங்களின் தீவிரத்தன்மை காரணமாக, அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கி, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணையின் ஒரு பகுதியாக, குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டார் மற்றும் பிற சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதோடு, சம்பவம் தொடர்பான தடயவியல் மற்றும் மருத்துவ ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.