க்ரைம்

மகள் போல பார்க்க வேண்டிய மருமகளிடம் போய்! மாமனாரின் உதவியுடன் தந்தையை கொன்ற மகன்.. தலையை தோண்டி எடுத்த நாய்!

தந்தையையும் மனைவியையும் முருகன் பலமுறை கண்டித்தும் இருவரும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் இருந்துள்ளனர்

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் வயது 55 இவரது மகன் முருகன். முருகனுக்கு திருமணமாகி அமுலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர், முருகன் மற்றும் அமுலு அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

சங்கருக்கும் அவரது மருமகளான அமுலுவிரும் திருமணத்திற்கு மீறிய தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து தந்தையையும் மனைவியையும் முருகன் பலமுறை கண்டித்தும் இருவரும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் இருந்துள்ளனர். இதனால் முருகன் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த (மே 19) தேதி வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய முருகன். மனைவியும் தந்தையும் நெருக்கமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியும் ஆத்திரம் அடைந்துள்ளார். உடனே அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தந்தையின் முகத்திலும் தலையிலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தந்தையின் உடலை மறைக்க எண்ணிய முருகன் தனது மாமனாரின் உதவியுடன் சங்கரின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று அருகில் உள்ள பாலாற்றங்கரையில் கைகளாலேயே ஒரு அடிக்கு குழிதோண்டி புதைத்துள்ளனர். சங்கரின் உடலில் கசிந்துள்ள இரத்தத்தால், ரத்த வாடை அடித்து அருகில் உள்ள நாய்கள் சங்கரின் தலை உள்ள பகுதியில் மணலை அப்புறப்படுத்தி சாப்பிட முயற்சித்துள்ளது.

இதனால் தலை மட்டும் வெளியில் தெரிந்துள்ளது. காலையில் அவ்வழியே சென்ற மக்கள் சங்கரின் உடலை பார்த்து காவல்துறைக்கு புகாரளித்துள்ளனர்.

ஆற்றங்கரைக்கு சென்று உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து உடலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் இறந்தவர் சங்கர் என தெரியவர அவரது குடும்பத்தை அழைத்து விசாரணை நடத்திய போது முருகன் தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டு போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். மகனே தந்தையை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்