நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுருளை கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதுடைய முத்துக்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான 60 வயதுடைய முருகன் என்பவருடைய 18 வயதுடைய மகள் வித்யா என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த வந்திருக்கிறார். வித்யா கல்லூரி படித்து வந்த நிலையில் முத்துக்குமாரும் வித்யாவையும் அடிக்கடி வெளியில் சுற்றி தெரிந்ததாக சொல்லப்படுகிறது.
இதன் மூலம் வித்யாவின் காதலை அறிந்த தந்தை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த (மே 20) ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு முத்துக்குமாரின் குடும்பத்துடன் சேர்ந்து சுருளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தனர். மேலும் தனக்கென தனியாக முத்துக்குமார் தனது கிராமத்தில் மற்றொரு இடத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு முத்துக்குமாரும், அவரது மனைவி வித்யாவும் தங்களது புதிய கட்டுமானப் பணிகளைப் பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட வித்யாவின் தந்தை முருகன், ஆத்திரத்துடன் முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்த அவர், தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் வீட்டின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
பின்னர், வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, அதற்குள்ளாக பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதில் வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி வீட்டின் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்து தப்பியோட முயன்ற முருகனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து 'தர்ம அடி' கொடுத்தனர்.
இச்சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து முருகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை முறைப்படி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.