robbery gang attack police man robbery gang attack police man
க்ரைம்

“மனைவியுடன் ஓட்டலுக்கு சென்ற காவலர்” - அரிவாளால் தாக்கி நகை பறித்த கும்பல்.. கொள்ளையர்களின் கூடாரமான கோவை கொச்சின் பைபாஸ்!

இதே பைபாஸ் சாலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு காரில் சென்ற ஒரு குடும்பத்தை தாக்கிய மர்ம கும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

Mahalakshmi Somasundaram

கோவை மாவட்டம் சின்னாப்பாளையம் ஆர். ஜி புதூரில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் மாவட்ட கியூ பிரான்ச் காவல் பிரிவில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்(ஜூலை 05) பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவியை ஓட்டலுக்கு சென்று உணவருந்த அழைத்து சென்றுள்ளார். இரவு வெகு நேரம் ஆனதால் குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு கணவன் மனைவி இருவர் மட்டும் சென்றுள்ளனர்.

கோவை கொச்சின் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் உணவருந்திய இருவரும் இரவு 12 மணியளவில் காரில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் சென்ற காரை வழி மறித்த மூன்று மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கி பார்த்திபனின் மனைவியிடமிருந்து செயின் வளையல் என் இந்து பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர்.

அவர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த பார்த்திபன் போலீஸ் அவசர எண்ணிற்கு அழைத்து தகவல் அளித்து விட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் துறையினரிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே பைபாஸ் சாலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு காரில் சென்ற ஒரு குடும்பத்தை தாக்கிய மர்ம கும்பல் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவை சேர்ந்த நகைக்கடை அதிபர் இவ்வழியே சென்ற போது அவரை தாக்கி அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்க கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டது. தற்போது காவலருக்கு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. எனவே விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோவை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.