டெல்லி; வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தின் இயக்குநராக சைதன்யானந்த சரஸ்வதி என்கிற சாமியார் உள்ளார். இவர் மீது பல மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகாரை முன் வைத்துள்ளனர்.
சைதன்யானந்த சரஸ்வதி என்று அழைக்கப்படும் பார்த்தசாரதி, டெல்லி வசந்த் கஞ்சில் உள்ள உயர் கல்வி நிறுவனத்தின் இயக்குநராகபணியாற்றி வந்தார் . இவர் மீது பதினேழு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ்அப்/எஸ்எம்எஸ் உரையாடல், உள்ளிட்ட மோசமான செயலில் ஈடுபட்டதற்காக இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதிதான் வசந்த் கஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. சைதன்யானந்த சரஸ்வதி மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்ததாக டெல்லி காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த செய்தி வெளியான உடனேயே அவர் தலைமறைவாகிவிட்டார்.
விசாரணையின் போது, ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவு (EWS) உதவித்தொகையின் கீழ் படிக்கும் 32 மாணவிகளின் வாக்குமூலங்கள்வழக்கில் ஆதரமாக்கப்பட்டன. அதில் 17 பேர், சைதன்யானந்த சரஸ்வதி தங்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர். ஆனால் இதில் இன்னும் அருவருக்கத்தக்க பல விஷயங்கள் வெளியாகி உள்ளது. சில ஆசிரியர்களும், நிர்வாகிகளும் கூட மாணவிகளை அவரது ஆசைக்கு இணங்க அழுத்தம் கொடுத்துள்ளனர்.
மேலும் சில மாணவிகளுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்த இந்த சாமியார், “என்னுடைய ரூமுக்கு வா” என்று அழைப்பது, உன்னை வெளிநாடுகளுக்கெல்லாம் அழைத்துச் செல்கிறேன், என ஆசை வார்த்தைகளை காட்டியும், நீ நான் சொல்வதை கேட்காவிட்டால் தேர்வில் பெயில் செய்துவிடுவேன் என மிரட்டியும் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சைதன்யானந்த சரஸ்வதி மீது பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் நீதிபதி முன்பு சாட்சியம் அளித்தனர். சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.