சமீபத்தில், தன் ஆண் நண்பருடன் 22 வயதுப் பெண் ஒருவர் இருந்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த பெண் சாலை விபத்து என்ற பெயரில் மர்மமான முறையில் உயிரிழந்தார். காவல்துறையினர், அந்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் சேர்ந்து இந்தப் படுகொலையைத் திட்டமிட்டு செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் அந்த உயிரிழப்புக் குறித்த விசாரணையை செய்து போக்குவரத்து காவல்துறை கடந்த செவ்வாயன்று உண்மையை வெளிக்கொணர்ந்தனர்.
ஆரம்பத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு ஒரு வாகனம் தப்பிச் சென்றதாகப் புகாரளிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அப்பெண்ணின் தந்தை முகமது ஃபாரூக் மற்றும் சகோதரர் முகமது ஹபில் ஆகியோரை காவல்துறை அவர்கள் இருவரையும் கைது செய்தது. சோஃபியா என அடையாளம் காணப்பட்ட அப்பெண், ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு ஹபிலுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சோஃபியா அகமதாபாத்தின் போபால் பகுதியில் உள்ள நிக்கி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, பணிமுடிந்த சோஃபியாவை ஹபில் அவரை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது மோதியதாக அவர் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தில் சோஃபியா மற்றும் ஹபில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் சோஃபியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். போலீசார் ஆரம்பத்தில் இந்த வழக்கை ஒரு சாலை விபத்தாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், விசாரணை முன்னேறும்போது, இந்த விபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலை என்பது வெட்டவெளிச்சமானது. மேலும், சோஃபியாவின் மரணம் ஒரு திட்டமிட்ட ஆணவப்படுகொலையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கினர். விசாரணையின் போது, ஹபீலின் கூற்றில் முன்னுக்கு பின் முரண்பாடு இருந்ததை காவல்துறை கண்டறிந்தது. அவர் விபத்து நடந்ததாகக் கூறிய இடத்தில், அப்படி ஒரு விபத்து நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த இடத்தில் வேறு எந்த வாகனமும் தென்படாததால், சிசிடிவி காட்சிகளும் சந்தேகத்தை எழுப்பியதால் போலீசார் விசாரிக்கும் கோணமே மாற்றப்பட்டது.
பின்னர் காவல்துறை ஹபிலிடம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் விளைவாக, அவரும், அவரது தந்தையும் சேர்ந்து சோஃபியாவின் கொலையைத் திட்டமிட்டு செய்தது தெரியவந்தது.
சோஃபியா ஒரு இளைஞருடன் இருக்கும் காணொளி சில காலத்திற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதாகவும், அது குடும்பத்தினரிடையேயும், சமூகத்திலும் அவமானத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் இருவரும் நினைத்துள்ளனர். மேலும், சோஃபியாவின் தந்தையும் சகோதரரும் அவருக்கு அறிவுரை கூற முயன்றுள்ளனர். ஆனால் அதேசமயம் அவர் வேறொருவருடனும் உறவில் இருப்பதாக அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
காவல்துறை விசாரணையின்படி, ஃபாரூக்கும் ஹபீலும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே சோஃபியாவின் கொலையைத் திட்டமிடத் தொடங்கியுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்த அந்த சமயத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதியை அவர்கள் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த கொலையை செயல்படுத்த சோஃபியா வேலைக்குச் செல்லப் பயன்படுத்திய பாதையை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அதில் சிசிடிவி கேமராக்கள் குறைவாக இருந்ததும், இருட்டாக இருந்ததும்தான். இது தாங்கள் பிடிபடாமல் தப்பிக்க உதவும் என்று அவர்கள் நம்பியுள்ளனர்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹபீலும், ஃபாரூக்கும் சோஃபியா பணிபுரிந்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். போபாலில் இருந்து திரும்பும்போது, அவர்கள் சோஃபியாவையும் தங்களுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர். ஹபீல் தன்னுடன் ஒரு சுத்தியலை எடுத்துச் சென்று, அதைக் கொண்டு சோஃபியாவின் தலையில் அடித்துள்ளார்.
சோஃபியா சுயநினைவை இழந்த பிறகு, ஹபில் அவரை மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே தள்ளி, சுத்தியலால் அவரது தலையில் மேலும் இருமுறை அடித்துள்ளார். சோஃபியாவின் மூச்சு நிற்கும் வரை தந்தையும் மகனும் காத்திருந்துள்ளனர்.
சோஃபியா இறந்த பிறகு, ஃபாரூக்கும் ஹபீலும் அவரது உடலுடன் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து பயணம் செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அவரது உடலைச் சாலையோரம் வீசி விபத்து போல சித்தரித்துள்ளனர். பின்னர், ஹபீல் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளார். காவல்துறைக்கு இது கொலை என்ற சந்தேகம் துளியும் வராமல் இருக்க, அவ்விருவரும் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
போக்குவரத்து போலீசார் ஆரம்பத்தில் இந்த வழக்கை ஒரு சாலை விபத்தாக விசாரித்தனர். இருப்பினும், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, விசாரணையில் இது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ஃபாரூக் மற்றும் ஹபீலைக் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்