க்ரைம்

“வேறு சமூக பெண்ணுடன் கள்ளக் காதல்.. மாந்தோப்பில் கிடந்த ஆண் சடலம்” - கணவரின் வெறிச்செயலால் அதிர்ச்சி!

இலஞ்சியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள மாந்தோப்பில் வைத்து

Muthu Lakshmi

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமம் தேவர் தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் சுதாகர் (45). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருப்பதுடன், பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்யும் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று இலஞ்சியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீனிவாசன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுதாகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுதாகரின் உடலை கைப்பற்றிய போலீசார் இந்த கொலைக்கு முன் விரோத காரணமாக? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணையை தொடங்கினர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிறைச்சந்திரன் உதவி ஆய்வாளர் சின்னத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

போலீசார் நடத்திய விசாரணையில் குற்றாலம் அருகே உள்ள மேல இலஞ்சி பகுதி இராமகிருஷ்ண கோவில் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மாரியப்பன் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இலஞ்சியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள மாந்தோப்பில் வைத்து சுதாகரை மாரியப்பன் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.  

இந்த கொலை தொடர்பாக மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரை கைது செய்து குற்றாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்த மாரியப்பனின் மனைவிக்கும் சுதாகருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அதை கைவிடுமாறு மாரியப்பன் எச்சரித்துள்ளார். இதற்கு சுதாகர் மறுத்ததாலேயே இந்த கொலை சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இறந்தவர் மற்றும் கொலை செய்தவர் என இருதரப்பினரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த கொலை சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.