தென்காசி; சங்கரன்கோவில் அருகே மது போதையில் தந்தையை வெட்டி படுகொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் செல்லையா (65) .இவருடைய மகன் கணேசன் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். ஆனால் இவர் குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். மது அருந்திவிட்டு நாள்தோறும் அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார் கணேசன்.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த கணேசன் தனது தம்பி முருகையாவின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தந்தை செல்லையாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கணேசன் அரிவாளால் செல்லையாவின் தலையில் பல இடங்களில் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்லையாவை தகவல் அறிந்து வந்த குருவிகுளம் காவல்துறையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்லையாஉயிரிழந்தார். செல்லையாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குருவிகுளம் காவல்துறையினர் தந்தையை வெட்டி விட்டு ஓடிய மகன் கணேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் தந்தையை மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்