ஆன்மீகம், ஜோதிடம் என்ற பெயரில், 58 பெண்களை சீரழித்த ஜோதிடர். மேலும், இவர் தன்னை எண் கணித நிபுணர், ஹிப்னாடிஸ்ட் மற்றும் கேப்டன் என அழைத்துக் கொண்டு தன்னை நாடி வரும் பெண்களிடம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டது அம்பலமாகியது. மகாராஷ்டிராவின் நாசிக் நகரில், ஆன்மீகம் என்ற பெயரில் 35 வயதுப் பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் ஜோதிடரான அசோக் கராத் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சடங்குகள் செய்வதாகக் கூறி, 67 வயதான அந்த ஜோதிடர் தனக்கு போதைப்பொருளைக் கொடுத்து, தனது நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலியல் சுரண்டல், இந்த ஒரு பெண்ணுக்கு மட்டும் நடக்கவில்லை. இதில் கிட்டத்தட்ட 58 பெண்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அசோக் கராத் அவரிடம் வரும் பெண்களிடம், அவர்களுடைய கணவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஒரு வித பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பின்னர் அவர்களுக்கு 'தேவபாணம்' கொடுப்பதாகக் கூறி போதைப் பொருள் கலந்த சில பானங்களை கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அவர்கள் அதைத் குடித்துவிட்டு அரை மயக்கத்தில் இருக்கும்போது, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் இந்த ஜோதிடர்.
கராத் தனது அலுவலகத்திற்குள் ரகசிய சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 58 பெண்கள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கியதாகக் கூறப்படும் பென் டிரைவ் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதுமட்டுமின்றி சந்தேகத்திற்கு இடமான சில ஆவணங்களையும் கைப்பற்றியதாக போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கராத்தின் முன்னாள் ஊழியர் தனது புகாரில், இதற்கு முன்னர் அவர் மளிகைப் பொருட்கள் வர்த்தகம் மற்றும் நிலம் வாங்குதல்-விற்றல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் அதில் போதுமான வருமானம் ஈட்டமுடியவில்லை என்றும் அவர் கூறினார். எனவே, அவர் 2019-ஆம் ஆண்டில் நாசிக் நகரில் உள்ள கராத்தின் சொத்து மேம்பாட்டு அலுவலகத்தில் சேர்ந்தார். ஆரோக்கியமான குழந்தை பிறக்க ஆசி வழங்குவதாகக் கூறி, கராத் தன் மனைவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், இதுகுறித்து கராத்திடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கியபோது, கராத் அவரை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறார். புகார்தாரரிடம் வீடியோ ஆதாரம் இருப்பதை கராத் அறிந்ததும், அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டத் தொடங்கியுள்ளார். மூத்த அரசியல்வாதிகளுடன் கராத்துக்கு இருந்த தொடர்புகளின் காரணமாகவே, தான் இதற்கு முன்னதாக காவல்துறையை அணுகவில்லை என்றும் புகார்தாரர் கூறியுள்ளார்.
அசோக் கராத், மிகவும் தேர்ச்சி பெற்ற ஜோதிடராகவும் தெய்வீக சக்திகள் உடையவராகவும் தன்னை சமூகத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். இவ்விவகாரத்தை விசாரிக்க, ஐபிஎஸ் அதிகாரி தேஜஸ்வினி சட்புடே தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. அதனடிப்படையில் கராத்தின் பண்ணைவீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பல தோட்டாக்களை மீட்டுள்ளனர். மேலும், இவருக்கு டெல்லியில் தொடங்கி மகாராஷ்டிராவின் அதிகார மையங்கள் வரை அரசியல் தொடர்புகள் இருப்பதாக வதந்தி பரவி வருகிறது. தற்போது இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.