க்ரைம்

“இரவில் ஓட ஓட வெட்டப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்” - நண்பனே கூலிப்படையை ஏவி கொன்ற அவலம்… பெண் பிரச்சனையும் காரணமா?

குரு பிரசாத் தன்னை கொலை செய்து விடுவார் என பயந்து அதற்கு முன்னதாக..

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குந்துமாரணப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு பிரசாத் (30) இவர் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டிற்கு சென்ற ஒரு கும்பல் கதவை தட்டி அவரை வெளியே வரவழைத்து அவரிடம் தகராறு செய்து ஆயுதங்களால் அவரை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்த கொலை சம்பவம் குறித்து குரு பிரசாத்தின் தாய் முனிரத்தினம் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், குரு பிரசாத்தின் நண்பரான தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேக்கலகவுண்டனூரை சேர்ந்த 39 வயதுடைய சுரேஷ்பாபு என்பவர் குரு பிரசாத்திடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு குரு பிரசாத் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். ஆனாலும் சுரேஷ் பாபு அந்த பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். இதனால் பணம் வாங்கியது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இது தவிர இருவருக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில்களும் விரோதம் ஏற்பட்டு பகையாக உருவாகி வந்துள்ளது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சுரேஷ் பாபுவிடம் விசாரணை நடத்த போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர் வீட்டில் இல்லாததால் அவரை தீவிரமாக தேடிய போலீசார் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் பதுங்கியிருந்த சுரேஷ்பாபுவை அங்கு சென்று மடக்கி கைது செய்தனர். அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்த போது, பணம் வாங்கிய பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் குரு பிரசாத் தன்னை கொலை செய்து விடுவார் என பயந்து அதற்கு முன்னதாக சுரேஷ்பாபு கூலிப்படையை வைத்து குரு பிரசாத்தை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதவிர சுரேஷ் பாபுவிற்கு நெருக்கமான ஒரு பெண்ணுடன் குரு பிரசாத்கள்ளக்காதலில் இருந்து வந்ததாகவும் இதுவும் இந்த கொலை சம்பவத்திற்கு ஒரு காரணமாகவும் கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேஷ் பாபுவை (39) கைது செய்த கெலமங்கலம் போலீசார், கூலிப்படையை சேர்ந்த தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (28) தேன்கனிக்கோட்டை தேர் பேட்டை சேர்ந்த தேவராஜ் (23) மற்றும் தேன்கனிக்கோட்டை கிசான் நகரை சேர்ந்த நவீன் (29) ஆகிய 3 பேரை சேலத்தில் வைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆனந்த், மோகன், மணி, அன்பரசன் ஆகியோரை தேடி வருகின்றனர். பணம் மற்றும் பெண் பிரச்சனையில் நண்பனே சக நண்பனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.