க்ரைம்

“கணவன் இருக்கும் போது வீட்டுக்கு வந்த கள்ளக்காதலன்” - நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்.. நான்காவது திருமணம் செய்ய பெண் போட்ட பிளான்!

மூன்றாவது கணவரான துளசிராம் இடையூறாக இருப்பார் என கருதிய சரோஜ் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

Mahalakshmi Somasundaram

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கணவர் உயிரிழந்த பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு துளசிராம் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரோஜ்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகேந்திர மெஹ்ரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மகேந்திர மெஹ்ராவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கு , தனது மூன்றாவது கணவரான துளசிராம் இடையூறாக இருப்பார் என கருதிய சரோஜ் அவரை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதையடுத்து, தனது கள்ளக்காதலன் மகேந்திர மெஹ்ரா மற்றும் அவரது நண்பர் விஷ்ணு ஆகியோருடன் இணைந்து, கடந்த (ஜூன் 28) ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த துளசிராமை கொலை செய்து புதைந்திருக்கின்றனர். பின்னர், சம்பவத்தை வேறு திசைக்கு திருப்பும் நோக்கில், துளசிராம் மாயமானது போல் நாடகமாடி உள்ளனர்.

கணவர் காணாமல் போன பிறகும், மூன்று நாட்கள் கடந்தும் சரோஜ் போலீசில் எந்தவித புகாரும் அளிக்காததோடு, அவரை தேடும் முயற்சியிலும் ஈடுபடவில்லை என சொல்லப்படுகிறது . இதனால் அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினரிடம் தெரிவித்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் மீனா உத்தரவின் பேரில், இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது கிடைத்த தொழில்நுட்ப ஆதாரங்கள், செல்போன் தகவல்கள் மற்றும் பிற சாட்சியங்களின் அடிப்படையில், சரோஜ், மகேந்திர மெஹ்ரா மற்றும் விஷ்ணு ஆகியோர் இணைந்து இந்த கொலையை திட்டமிட்டு அரங்கேற்றியது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், "இந்த கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மகேந்திர மெஹ்ராதான் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அனைத்தையும் செய்தார்" என்று சரோஜ் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், போலீசார் சேகரித்த ஆதாரங்கள் அவரது வாக்குமூலத்திற்கு முரணாக இருப்பதாகவும், இந்த வழக்கின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். பெண் ஒருவர் மூன்றாவது கணவரை கொலை செய்து, நான்காவது திருமணத்திற்கு திட்டமிட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.