கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு - பாளையங்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஷ் (25). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் புதுக்கடை, உண்ணாமலைக்கடை, களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை காதலிப்பதாக கூறி அவர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும் அந்த பெண்களிடம் இருந்து நகைகளை ஏமாற்றி பறித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜெனிஷ்-ஐ கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில், ஜெனிஷ் எப்போதும் சொகுசு கார் மற்றும் சொகுசு இருசக்கர வாகனங்களில் வலம் வந்து, வசதி மிக்க மாணவிகள் மற்றும் பெண்களை குறிவைத்து காதலிப்பதாக நடித்து வந்துள்ளார். மேலும், பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று, அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களது நகைகள் மற்றும் பணங்களை பறித்து வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் ஜெனிஷ் மாணவிகள் மற்றும் பெண்களிடம் பறித்த பணத்தில் சொந்தமாக ஆம்னி பஸ் மற்றும் இரண்டு சொகுசு கார்களும் வாங்கியதும் தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணையில் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் ஊர் சுற்றிவிட்டு அவரிடமிருந்து 26 பவுன் தங்க நகையை அபகரித்துள்ளார். அதன்பின்னர் மாணவிக்கு ஜெனீஷ்-ன் சுய ரூபம் தெரியவந்ததும், மாணவி அவரை விட்டு விலகி உள்ளார். உடனே அவரிடம் நகையை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் நகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார் ஜெனிஷ். இதனை அடுத்து மாணவி புதுக்கடை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெனிஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருத்துவபுரம் பகுதியில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாலிபரின் மனைவியை காதலிப்பதாக கூறி அவருடன் ஊர் சுற்றிவிட்டு அவரிடம் இருந்து நகையை பறித்துள்ளார் ஜெனிஷ். மேலும் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள வசதி மிக்க பெண்ணை காதலிப்பதாக கூறி அவரிடமிருந்தும் நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார்.
தொடர்ந்து மருதன்கோடு பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசதியானவர் என தெரிந்து கொண்டு, தினசரி பள்ளிக்கு செல்லும் போது சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை மாறி மாறி பயன்படுத்தி சிறுமியை ஏமாற்றி காதலிப்பதாக கூறிவந்துள்ளார். மேலும், அவரிடமிருந்து 40 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துள்ளார். மேலும் ஜெனிஷ் பலரை ஏமாற்றியதாக தெரிய வந்ததையடுத்து, தனிப்படை போலீசார் வாலிபர் ஜெனிஷ் - ஐ மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதை அடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் ஜெனிஷ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்