மதுரையில் உள்ள, உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ்((27) என்ற இளைஞர், இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் மேலூர். அங்கிருந்து உலகனே வந்து கடந்த சில ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்துவருகின்றார்.
இந்நிலையில் நேற்றிரவு ஆட்டோ ஓட்டி விட்டு வீட்டிற்கு வந்த அபினேஷ் வீட்டின் முன்பாக நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் அங்குவந்த சிலர் அபினேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வார்த்தை மோதல் திடீரென கைகலப்பாகி உள்ளது.
பின்னர் அபினேஷின் தலையில் அருகில் இருந்த ஓட்டை எடுத்து அந்த கும்பல் தாக்கியுள்ளனர். இதனால் அபினேஷ் வலியால் சத்தமிட்ட நிலையில் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது கீழே சரிந்து விழுந்த அபினேஷை அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் முகத்தில் வெட்டியதோடு, இந்த கொலையை “நாங்கதான் செஞ்சோம்னு எல்லோருக்கும் தெரியனும், எங்கள நெனச்சாலே எல்லோருக்கும் பயம் வரணும்” என கூறியபடி காவல்துறையினருக்கு சவால் விடும் வகையில் அதே இடத்தில் அரிவாளை இரத்தத்துடன் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த அபினேஷை அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது, பின்னர் அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி காவல்துறையினர் அபினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இக்கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் கிடந்த அரிவாளை, தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றியதோடு மாட்டுத்தாவணி காவல்துறையினர் உதவியுடன் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த அபினேஷ் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்