madurai wife killed his husband news in tamill 
க்ரைம்

“இரும்பு கம்பியால் கணவனை அடித்து கொன்ற மனைவி” - குடித்துவிட்டு வந்ததால் நடந்த விபரீதம்… மகளின் கண் முன்னே பலியான தந்தை!

விசாரணை மேற்கொண்ட போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம், திருநகர் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் வசித்து வந்தவர் 40 வயதான பாண்டியராஜன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் பாண்டியராஜன் வீட்டிற்கு அருகில் உள்ள கோவில் பள்ளத்தில் பூ மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். பாண்டியராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகச் சொல்லப்படுகிறது.

கடையை முடித்துவிட்டு தினந்தோறும் குடித்துவிட்டு தான் வீட்டுக்கு வருவார் என சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பாண்டியராஜன் வீட்டில் இருந்த மனைவி விஜயலட்சுமியுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஒரு கட்டத்தில் பாண்டியராஜன் தனது மனைவியை அடித்து கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி விஜயலட்சுமி கீழே இருந்த இரும்பு கம்பியை எடுத்து கணவரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் போலீசார் உயிரிழந்த பாண்டியராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் விஜயலட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மது போதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.