Ramnad murder news 
க்ரைம்

“உனக்கு பாதி உன் தம்பிக்கு பாதி” - சொத்தை சரி சமமாக பிரித்த தந்தை.. வீட்டு வாசலில் வைத்து வெட்டிய மர்ம நபர்!

இந்த நிலத்தை மையமாக வைத்து செல்வராஜிக்கும் மணிகண்டனுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வராஜ் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார்.

Mahalakshmi Somasundaram

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி செல்வராஜ். இவருக்கு திருமணமாகி முனியம்மாள் என்ற மனைவியும் மணிகண்டன் என்ற மகன் மற்றும் கோமதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கட்டிட தொழிலுக்கு சென்ற இடத்தில் அபிராமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் செல்வராஜிக்கும் அபிராமிக்கு சுரேஷ் என்ற மகனும் தேவி என்ற மகளும் உள்ளனர்.

விழுப்புரத்தில் செல்வராஜிக்கு சொந்தமான நிலம் இருந்துள்ளது, இதை மொத்தமாக தனது பெயருக்கு எழுதி வைக்க சொல்லி முதல் மனைவியின் மகன் மணிகண்டன் செல்வராஜிடம் கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த செல்வராஜ் “உனக்கு பாதி உன் தம்பிக்கு பாதி மொத்தமா எல்லாம் எழுதி தர முடியாது” என கூறியுள்ளார்.

இந்த நிலத்தை மையமாக வைத்து செல்வராஜிக்கும் மணிகண்டனுக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வராஜ் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளார். மணிகண்டன் தனது தந்தையின் முழு சொத்தும் தனக்கு வரவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் செல்வராஜ் நீதிமன்றத்திற்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார். பின்னர் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்ற நிலையில் செல்வராஜ் மற்றும் வீட்டின் வாசலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் செல்வராஜின் முதுகிலும் கழுத்திலும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

செல்வராஜின் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த அபிராமிக்கு இருட்டாக இருந்ததால் மர்ம நபரின் முகம் சரியாக தெரியாமல் இருந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வராஜ் சிறிது நேரத்தில் அதே இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செல்வராஜின் இரண்டு குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக இந்த கொலை நடந்ததா இல்லை முன்பகை காரணமாக நடந்ததா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்கு வெளியில் அமர்ந்து இருந்த செல்வராஜ் வீட்டின் வாசலிலேயே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.