natham old lady attack 7years old child 
க்ரைம்

விளையாட வந்தது ஒரு தப்பா!? குழந்தையை இரும்புக்கம்பியால் தாக்கி ரோட்டில் வீசிய 65 வயது மூதாட்டி!

சிறுமியின் முகத்தில் கையால் குத்தியதில் சிறுமியின் முகம் வீங்கிய நிலையில் மயக்கமடைந்து விட்டார். படுகாயம் அடைந்த சிறுமியை மூதாட்டி சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

Anbarasan

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டி சேர்ந்தவர் மணி மகன் பிரபு(36). இவர் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும்,2 குழந்தைகள் உள்ளனர். இதில் இவரது மகளான பிரித்திகா (வயது 7) அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள கர்நாடகாவில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ராமசாமி மகன் செல்வம் என்பவரின் வீட்டில் உள்ள குழந்தைகளுடன் அடிக்கடி சென்று விளையாடுவது வழக்கம். அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அந்த வீட்டில் உள்ள செல்வத்தின் தாய் குருவம்மாள் (வயது 65) என்ற மூதாட்டி இங்கெல்லாம் வந்து என் பேரன் பேத்திகளுடன் விளையாட வரக்கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வம் தனது குடும்பத்தினருடன் கோவை அருகே உள்ள ஈஷா மையத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். ஆனால் ஏதும் அறியாத பச்சிளம் குழந்தையான சிறுமி பிரித்திகா மீண்டும் விளையாடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு அங்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சிறுமி வருவதை பார்த்த மூதாட்டி உன்னைத்தான் இங்கு விளையாட வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறேனே மீண்டும் ஏன் வருகிறாய் எனக் கூறி ஏதுமறியாத பச்சிளம் குழந்தைமீது இரும்பு கம்பியால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

மேலும் சிறுமியின் முகத்தில் கையால் குத்தியதில் சிறுமியின் முகம் வீங்கிய நிலையில் மயக்கமடைந்து விட்டார். படுகாயம் அடைந்த சிறுமியை மூதாட்டி சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்து மயக்க நிலையில் கிடந்த சிறுமியை பார்த்தவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பதறியபடி வந்த பெற்றோர் சிறுமியை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர்.

சிறுமியை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதி சென்று விட்டனர் என நினைத்திருந்த வேளையில் இரண்டு நாட்களுக்கு பின்னர் கண் விழித்த சிறுமி தன்னை தாக்கியது மூதாட்டி குருவம்மாள் தான் என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நத்தம் போலீசார் மூதாட்டி குருவம்மாளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் .விசாரணைக்குப் பின்பு நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

7 வயது சிறுமியை மூதாட்டி ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்