விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான முருகன். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அங்கு போலீசாருக்கு பயணப்படிக்கான ரசீது ஒதுக்கி பணம் கொடுத்தல் உள்பட பல்வேறு வகையான எழுத்து பணிகளை இவர் செய்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் வெளி மாவட்டத்திற்கு சென்று வந்த செலவு விவரங்களுக்கான தொகையை தர வலியுறுத்தி நீலகிரியில் பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவர் இவரிடம் விண்ணப்பத்துடன் ரசீதுகளை கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் படிவத்தில் இருந்த ஆய்வாளரின் தொடர்பு எண்ணை குறித்துக் கொண்ட முருகன், தொடக்கத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண் ஆய்வாளர் வாட்சப்புக்கு குட் மார்னிங், குட் நைட் என தொடர்ச்சியாக குறுஞ்செய்தி அனுப்பி வந்துள்ளார். புதிய எண்ணாக இருந்ததால் ஆய்வாளர் எந்த பதிலும் திருப்பி அனுப்பாமல் இருந்துள்ளார். அடுத்த ஒரு சில வாரங்களில் பெண் ஆய்வாளர் whatsapp எண்ணிற்கு முருகன் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஆய்வாளர் இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து உதகை ஊரக காவல் ஆய்வாளர் கமலேஸ், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, பெண் ஆய்வாளர் எண்ணிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிய முருகன் மீது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரைக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த முருகன் சபல புத்தியில் பெண் காவலருக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை அனுப்பியதாக தெரிவித்தனர்.
மேலும் முருகன் இது போல வேறு யாருக்கும் ஆபாச படங்கள் வீடியோக்கள் அனுப்பியுள்ளாரா? என்பது குறித்தும் இதற்கு முன்னர் பணியாற்றிய இடங்களில் இது போல் சம்பவம் நடைபெற்றுள்ளதா? இவர் மீது ஏதேனும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.