இங்கிலாந்தில் முன்னாள் உடற்கல்வி ஆசிரியை ஒருவர், பள்ளி மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். 2022-ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக, 30 வயதான பிரான்வென் ஜேம்ஸ் மீது நான்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிப்பன்ஹாமைச் சேர்ந்த பிரான்வென் ஜேம்ஸ், 2022-ஆம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் உள்ள பிட்டர்ன் பார்க் பள்ளியில் பணியாற்றியபோது, அப்போது 16 வயதாக இருந்த மாணவர் ஒருவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஆசிரியை ஜேம்ஸ் மறுத்துள்ளார். தானும் அந்த மாணவரும் பாலியல் உறவில் ஈடுபடவில்லை என்றும், அவருடன் காதல் தொடர்பான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அந்த மாணவர் நீதிமன்றத்தில் அளித்த வீடியோ வாக்குமூலத்தில் வேறுபட்ட தகவலை தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் தன்னை சினாப்சாட்-ல் சேர்த்த பின்னரே இருவருக்கும் இடையிலான தொடர்பு தொடங்கியதாக அவர் கூறியுள்ளார். பின்னர் ஜேம்ஸின் காரில் இருவரும் முத்தமிட்டுக் கொண்டதாகவும், அதன்பிறகு அவரது வீட்டிற்குச் சென்றதாகவும் மாணவர் தெரிவித்துள்ளார்.
அங்கு இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அது வெறும் உடலுறவாக மட்டும் இல்லாமல், ஜேம்ஸ் தன்னை நேசிப்பதாகக் கூறியதாகவும் அந்த மாணவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அப்போது அவருடன் இருந்த அனுபவத்தை ஒரு “டீனேஜ் ட்ரீம்” போல உணர்ந்ததாகவும் அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கின் விசாரணையின்போது, மாணவர் ஏன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று ஜேமஸிடம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த ஜேம்ஸ், அந்த மாணவர் தனது நண்பர்கள் மத்தியில் பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காக இந்தக் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கலாம் என தெரிவித்தார். குறிப்பாக, “ஒரு ஆசிரியையுடன் தனக்கு உறவு இருப்பதாக நண்பர்களிடம் தற்பெருமை பேச விரும்பியிருக்கலாம்” என அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், அந்த மாணவர் தனது சினாப்சாட் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது குறித்து ஜேமஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தற்போது பின்னோக்கிப் பார்க்கும்போது, அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மாணவர் கூறிய குற்றச்சாட்டுகளும், ஜேம்ஸ் அளித்த மறுப்பும் நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி எனக் கருதப்படமாட்டார். வழக்கின் இறுதி முடிவை நீதிமன்றமே தீர்மானிக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்