தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், பகுதியிலுள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக விக்ராந்த் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வருகிறார். இவரது தாயார் வசந்தா(65) அவரது சொந்த ஊரான தேரிப்பனை பகுதியில் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வசந்தா மாலையில் வெகு நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்த போது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார் மற்றும் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வசந்தா அணிந்திருந்த 6 பவுண் தாலிச் செயினும்
2 கம்மலும் திருடு போனது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கைரேகை நிபுணர்கள் வீட்டை சோதனை செய்து முக்கிய தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து மோப்ப நாய் ஜியா வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கொலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதில் தனியாக வீட்டில் இருந்த வசந்தாவை நகைக்காக,கொலை செய்து நகைகைளை திருடி சென்ற அதே பகுதியை சேர்ந்த செல்வரதி (24) என்ற பெண்ணை கைது செய்துள்ளனர் காவல் துறையினர். சாத்தான்குளம் அருகே தனியாக வீட்டில் இருந்த காவலரின் தாயையே கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்