கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அதே அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பேராசிரியர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் நேற்று சென்னை ஆணையர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் தொடர்ந்து மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாக புகாரளித்திருக்கிறார். தொடர்ந்து இரண்டு வருடங்களாக பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் இரவு 10 மணிக்கு மேல் ஆபாசமான மெசேஜ் அனுப்பி தொல்லை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போல தன்னிடம் மட்டுமல்லாமல் அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் பல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருகிறார் என தெரிவித்துள்ளார். இரவு நேரங்களில் தொடர்ந்து போன் செய்து தன்னிடம் பேச சொல்லி டார்ச்சர் செய்து வருவதாகவும் இதுகுறித்து ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் கமிட்டியும் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே முதற்கட்டமாக போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு அவரது செல்போனை கைப்பற்றி பரிசோதனை செய்து வருகின்றனர். இதில் பேராசிரியர் ஆபாசமாக மெசேஜ் செய்தது நிரூபிக்கப்பட்டால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து அறிந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பேராசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்