க்ரைம்

வட மாநில தொழிலாளர்கள் குறித்தவதந்தி.... அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம்!!

Malaimurasu Seithigal TV

வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதாக உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம், ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக ட்விட்டர் மூலம் வதந்தி பரப்பியதாக, உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் பதிவான வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் பெற்ற உம்ராவ், திருப்பூரில் பதிவான வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அதில், தமது ட்விட்டர் கணக்கை முடக்கி,  இந்த தகவல் பதிவு செய்யப்பட்டதாகவும், அதற்கும், தனக்கும் தொடர்பு இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இந்த மனு  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, உம்ராவ்  மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதை ஏற்ற நீதிபதி, உம்ராவ் மனு மீதான விசாரணையை மார்ச்  28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.