க்ரைம்

“மகளுக்கு தந்தை எழுதி கொடுத்த சொத்து” - நான்கு ஏக்கர் நிலத்திற்காக நடந்த கொலை.. அத்தை மகன் தலையில் கல்லைப் போட்ட அண்ணன் தம்பி!

இதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் மற்றும் அவரது தம்பி ஜோசப்பை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள கொங்கரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் கட்டிடங்களில் கம்பி கட்டும் வேலையை செய்து தனது தாய் மற்றும் தங்கையை பார்த்து வந்துள்ளார். ஜோசப்பின் தாய் லில்லி புஷ்பாவிற்கு அவரது தந்தை 4 ஏக்கர் நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். அதில் ஜோசப் தாய் லில்லி புஷ்பா விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் லில்லி புஷ்பாவின் அண்ணனுக்கு நிலத்தை லில்லி புஷ்பாவிற்கு கொடுத்தது பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் லில்லி புஷ்பாவின் அண்ணன் மகன்கள் தொடர்ந்து நிலத்தை கேட்டு லில்லி புஷ்பா மற்றும் அவரது மகன் ஜோசப்பிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு ஜோசப் ஜார்ஜ் வீட்டின் வழியாக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை கவனித்த மது அருந்திக் கொண்டிருந்த ஜார்ஜ் மற்றும் அவரது தம்பி ஜோசப்பிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளனர்.

அப்போது ஜோசப்பும் ஜார்ஜை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் மற்றும் அவரது தம்பி ஜோசப்பை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அருகில் இருந்த கல்லை எடுத்து ஜோசப்பின் தலையில் போட்டு வரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை பக்கத்து கிராமத்தில் பதுங்கியிருந்த ஜார்ஜை கைது செய்த போலீசார் அவரது தம்பியை தீவிரமாக தேடி வருகின்றனர். 4 ஏக்கர் நிலத்திற்காக குடி போதையில் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தனது சொந்த அத்தை மகனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.