திருவாரூரில் இளம் பெண்ணை ஈவ்டீசிங் செய்த புகாரில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் உட்பட இருவரை திருவாரூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயதுடைய இளம் பெண் நேற்று தனது தந்தை வருவதற்கு அங்கு காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24) என்பவர் அங்கு தன் நண்பருடன் வந்துள்ளார். ஆனந்தராஜ் தமிழக வெற்றி கழக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். மேலும் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரும் இவருடைய நண்பர் அசோக் என்பவரும் நேற்று இரவு திருவாரூர் பேருந்து நிலையத்தில் சென்று தனியாக நின்று கொண்டிருந்த அந்த இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் செய்துள்ளனர். மேலும் தகாத முறையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். செய்வதறியாது நின்ற அந்த இளம் பெண் அங்கிருந்து விலகி செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் அந்த பெண்ணை விடாது தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். சற்று நேரத்தில் அந்த பெண்ணின் தந்தை வந்தவுடன் தனது மகளிடம் ஈவ்டீசிங் செய்த இருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஈவ்டீசிங் செய்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜின் இருசக்கர வாகன சாவியை பிடுங்கிக் கொண்டு தனது மகளை அழைத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று நடந்தது குறித்து கூறி புகார் அளித்துள்ளார்..
அதையடுத்து இளம் பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்தின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் அசோக் ஆகிய இருவர் மீதும் கிண்டல் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவகள் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொடர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.