உலகில் எந்த பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்லவே முடியாது. இந்த தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம், வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். மேலும், சில நாடுகளில் பொதுவெளியில் பெண்கள் பலவிதமான பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்கள், எவ்வித வயது பேதமின்றி வக்கிரத்தின் உச்சத்தில் செயல்பட்டே வருகின்றனர்.
மேலும் பெண்களுக்கு, எந்த சூழலிலும் எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு உதாரணமாக தினம்தோரும் ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணை, கணவரை தாக்கி விட்டு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்தை அடுத்த மல்லிகா நகர் பகுதியை சேர்ந்த மரியமலர் பிளாடின் வயது (46) இவர் கணவர் ஜோசப் ஆரோக்கியம் இவர்கள் இருவரும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு இரவில் தங்களின் வீடு நோக்கி நடந்து சென்றனர்.
இந்த நிலையில், சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. இவர்கள் நடந்து சென்றதை பார்த்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், ஜோசப் ஆரோக்கியத்தை தாக்கி தள்ளிவிட்டு மரியமலருக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் அலறடித்துக் கொண்டு நான்கு பேரிடமிருந்து தப்பித்து ஓடி வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த பெண், நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நான்கு பேரில் ஒருவரை பிடித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.