செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சானடோரியம், துர்கா நகரை சேர்ந்தவர் 26 வயதுடைய வினோத்குமார். இவர் அதே பகுதியில் சொந்தமாக ஷேர் ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். வினோத் குமாரின் நண்பரான பூங்காவனம் என்பவருக்கு கடந்த 24ம் தேதி பிறந்தநாள் வந்துள்ளது. எனவே அவரை பிறந்தநாளை மற்ற நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய வினோத் குமார் பூங்காவனத்திடம் ட்ரீட் வைக்க சொல்லி கேட்டுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து விமல்ராஜ் உள்ளிட்ட மற்ற சில நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து பல்லாவரம் திருநீர்மலை சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளனர்.
மது அருந்தி விட்டு வெளியே வந்த போது, ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத்தை கடத்திக் கொண்டு அவரது ஆட்டோவையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பூங்காவனம் வினோத்குமாரை தேடியுள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், வினோத் குமாரை தாம்பரம் முகவரி முதல் தெரு, குறிஞ்சி நகரில் உள்ள விஜி என் கார்டனில் வைத்து தலை, கழுத்து, கையில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டதாக தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வினோத் குமார் உயிரிழந்து கிடந்தார். எனவே அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமாரை கடத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் எதற்காக வினோத் குமார் கொலை செய்யப்பட்டார்? காரணம் என்ன என்பதை பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆட்டோ ஸ்டாண்டில் சவாரிகளை ஏற்றி ஷேர் ஆட்டோ ஓட்டுவதிலும் அதற்காக முன் தொகை பணம் கொடுப்பதிலும் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் குற்றவாளிகளை கைது செய்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளனர், ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.