அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு, 18 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.155 கோடி) இழப்பீடு வழங்க நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு, 2019-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டோர் சட்டத்தின் கீழ் நீதி மன்றத் தீர்ப்பை எட்டிய முதல் வழக்காகவும் வரலாற்றுச் சிறப்பைப் பெற்றுள்ளது.
இந்த சம்பவம் 1970-களின் தொடக்கத்தில், நியூயார்க் நகரின் ரெட் ஹூக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர், அப்போது மூன்றாம் வகுப்பில் படித்த 10 வயது மாணவியாக இருந்தார். பள்ளியின் இசை ஆசிரியரான ஜான் கிளார்க், வகுப்பு மாணவர்களுக்கு திரைப்படம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், இருட்டாக இருந்த கலையரங்கில் மாணவியை மடியில் அமரவைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் ஒரு சம்பவத்தில், ஒரு மாணவனை சுமார் 30 நிமிடங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அலறி உதவி கேட்க முயன்றபோது, அவரது வாயை கையால் மூடி சத்தம் வெளியேறாமல் தடுத்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞர் ஜெஃப் ஹெர்மன் கூறுகையில், அந்த சம்பவம் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், "அவர் அந்த கலையரங்கில் இருந்து வெளியே வந்தபோது, முன்பு இருந்த குழந்தையாக இல்லை. அந்த அனுபவம் அவரது எதிர்காலத்தையே பறித்துவிட்டது" என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்தபோது, சம்பவம் குறித்து 1970-ஆம் ஆண்டிலேயே பள்ளி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றிருந்தும், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மாறாக, பாதிக்கப்பட்டவரை மட்டும் இசை வகுப்பிலிருந்து மாற்றிவிட்டு, ஆசிரியரை அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இந்த அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அப்போது பள்ளியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், 1971-ஆம் ஆண்டு வெளியான செய்தித்தாள் அறிக்கைகளிலும் இது பதிவாகியிருந்ததாக வழக்கறிஞர் தெரிவித்தார். பின்னர் ஜான் கிளார்க் குறைந்தபட்ச குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் நன்னடத்தை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில், பள்ளி நிர்வாகமும் நகர நிர்வாகமும் குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதாக நடுவர் மன்றம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவருக்கு 18 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டை நியூயார்க் நகர நிர்வாகமே வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. "பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும், குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் நீதியைப் பெறும் உரிமை உடையவர்களே. இந்தத் தீர்ப்பு அவர்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரமாகும்" என்று வழக்கறிஞர் ஜெஃப் ஹெர்மன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்து வருவதாக நியூயார்க் நகர நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.