telangana wife plan to killed husband  
க்ரைம்

“நீ என் புருஷனை கொன்னு தான் ஆகணும்” - மனைவியின் வாட்ஸ்அப் பார்த்து அதிர்ந்த கணவன்… காதலி திட்டத்தை ‘execute’ செய்த கள்ளக்காதலன்!

தனது சகோதரர்களை அழைக்க சென்றபோது, சைதுலு அவரை பின்தொடர்ந்து வந்து தாக்க...

Mahalakshmi Somasundaram

தெலங்கானாவில் கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த கணவர், மனைவியின் செல்போனை சோதனை செய்தபோது கிடைத்ததாக கூறப்படும் உரையாடல்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவருக்கும், பவானி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வர் ராவ் காலை வேலைக்கு சென்றால் மீண்டும் மாலை தான் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் கடந்த (ஜூலை 27) ஆம் தேதி வழக்கத்துக்கு மாறாக மதிய உணவுக்காக ராஜேஸ்வர் ராவ் திடீரென வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனது மனைவி பவானி, வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்ததை பார்த்ததாக ராஜேஸ்வர் ராவ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அந்த நபர் சைதுலு என்பதும், கம்மம் பகுதியில் உள்ள கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, குடும்பத்தினர் மற்றும் கிராம பெரியவர்கள் முன்னிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண பஞ்சாயத்து நடத்த முடிவு செய்திருக்கின்றனர். அந்த பஞ்சாயத்தில் தனது சகோதரரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ராஜேஸ்வர ராவ் தனது சகோதரர்களை அழைக்க சென்றபோது, சைதுலு அவரை பின்தொடர்ந்து வந்து தாக்க முயன்றதாகவும், அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்துக்குப் பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சந்தேகமடைந்த ராஜேஸ்வர் ராவ், மனைவியின் செல்போனை சோதனை செய்துள்ளார்.

அப்போது வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பவானி மற்றும் சைதுலு இடையே நடந்ததாக கூறப்படும் உரையாடல்களை பார்த்து ராஜேஸ்வர ராவ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதில், ராஜேஸ்வர் ராவை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்வது குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் முதலில் காதலன் இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் பவானி அவரிடம் “நீ என் புருஷனை கொன்னு தான் ஆகணும்.. இல்ல நான் உன்ன கொன்னுடுவேன்” என மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து, அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை சேமித்து வைத்த ராஜேஸ்வர் ராவ், தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி கடந்த (ஆகஸ்ட் 1) ஆம் தேதி தோர்ணக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தோர்ணக்கல் போலீசார் முதற்கட்டமாக ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, தொடர் விசாரணைக்காக வழக்கை கம்மம் கிராமப்புற காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். தற்போது ராஜேஸ்வர் ராவ் அளித்துள்ள டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பவானி மற்றும் சைதுலுவிடம் விசாரணை நடத்தி, கணவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரை சாலை விபத்து போல கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்