Namakkal crime newsநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 37 வயதுடைய கோபி கிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே கோபி கிருஷ்ணன் அவரது உறவினரான குட்டலாடம்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்து வந்திருக்கிறார். குறிப்பாக இருவரும் சென்ட்ரிங் மற்றும் கோழி வெட்டும் கூலி தொழில் தொடர்ந்து செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு கோழி வெட்டும் வேலைக்கு சென்ற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணுடன் வெளியில் சென்று தனிமையில் இருப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் கோபி கிருஷ்ணனும், மணிகண்டனும் ஒன்றாக வேலைகளுக்கு சென்று விட்டு மது அருந்துவதை பழக்கம் வைத்திருந்தனர்.
எனவே மணிகண்டன் தனது கள்ள காதலியுடன் தனிமையில் இருக்க வெளியூருக்கு செல்லும் போது கோபி கிருஷ்ணனும் அவருடன் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். நாளடைவில் இது மணிகண்டனுக்கு பிடிக்காமல் கோபி கிருஷ்ணனுடன் சேர்ந்து வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்திருக்கிறார். இருப்பினும் தொடர்ந்து கோபி கிருஷ்ணன், மணிகண்டன் அவரது காதலியுடன் தனிமையில் இருக்கும் போது உடன் செல்வதை நிறுத்தாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் கோபி கிருஷ்ணனை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மணிகண்டன், கோபிகிருஷ்ணன் ஆகிய இருவரும் ராசிபுரம் பார் ஒன்றில் மது அருந்திவிட்டு, மணிகண்டன் தனது தொலைபேசி தொலைந்து விட்டதாக கூறி மல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கோபி கிருஷ்ணனை பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மல்லூர் சென்று இருவரும் தனியார் பங்க் ஒன்றிற்கு நடந்து சென்று 50 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கியுள்ளனர். பின்னர் கோபி கிருஷ்ணனை பங்கின் நுழைவு வாயில் வரை அழைத்துச் சென்ற மணிகண்டன் பங்கின் நுழைவாயில் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். கோபி கிருஷ்ணன் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறல் சத்தம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீ அணைப்பான் கருவியை கொண்டு தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற வெண்ணந்தூர் காவல்துறையினர் மணிகண்டனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது கோபிகிருஷ்ணன் 80% சதவீதம் தீக்காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஒருவர் பெட்ரோல் பங்க அருகில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.