வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் அடுத்த சம்பங்கிநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது அண்ணா சிறு வயதிலேயே இறந்து விட்ட நிலையில் பிரபுவின் தாய் லோகநாயகி அவரது தங்கை மற்றும் சித்தி உறவினர்கள் என அனைவரும் பிரபுவை செல்லமாக வளர்த்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையில் லோகநாயகியின் தங்கையின் கணவர் 5 மாத குழந்தையாக சரவணனை விட்டு சென்ற நிலையில் அவரையும் தன் குழந்தையாகவே லோகநாயகி மற்றும் அவரது தங்கை பாசமாக வளர்த்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபுவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த லோகநாயகி தான் உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் பிரபுவுக்கும் அதே பகுதியில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பு இருந்தே தொடர்பு இருந்து வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு இதனை அறிந்த பிரபுவின் மனைவி அவரை பிரிந்து சென்றிருக்கிறார். பின்னர் பிரபு தான் காதலித்து வந்த ஜெயந்தியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பிரபு குடிப்பழக்கத்திற்கு ஆளான நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த ஜெயந்தி ஒரு நாள் குடிபோதையில் இருந்த பிரபுவின் மார்பின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கழுத்தை நெரிக்க முயற்சித்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது அங்கு சென்ற பிரபுவின் தாயார் லோக நாயகி பிரபுவிடம் “உனக்கு எதற்காக இந்த வாழ்க்கை. உன் உயிரை இவள் கையில் முடித்துக் கொள்வதற்காக தான் இவ்வளவு நாள் உன்னை வளர்த்தோமா என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார்” இதை பார்த்த பிரபு மனைவி மீது குற்றம் வராமல் இருப்பதற்காக அம்மா அது விளையாட்டுக்காக செய்தோம் என்று தாயாரை சமாதானப்படுத்தி உள்ளார்.
திருமணமாகி மூன்று வருடங்களான நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஜெயந்தி வேறு ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. எப்பொழுதும் குடிபோதையில் இருக்கும் பிரபு கடந்த (மார்ச் 24) ஆம் தேதி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே பிரபுவிற்கு வலிப்பு நோய் வந்து மயங்கி விழுந்து விடுவதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜெயந்தி கூறியுள்ளார். பிரபுவுக்கு அவ்வப்போது வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம் என்ற நிலையில் லோகநாயகி மற்றும் அவரது உறவினர்கள் பிரபுவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தார் என்று கேட்டதற்கு பிரபுவின் மனைவி ஜெயந்தி வலிப்பு நோய் வந்து இறந்து விட்டதாகவும் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜெயந்தி “கணவரை நான் தான் கழுத்தை நெரித்து கொன்றேன், இதற்கு பிரபுவின் தம்பி சரவணன் தனக்கு உதவி செய்தார்” எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சத்துவாச்சாரி போலீசார் ஜெயந்தி மற்றும் சரவணனனை கைது செய்து அவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பிரபுவின் தாயார் மற்றும் உறவினர்கள் கூறும் பொழுது சரவணன் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்றும் ஜெயந்தி அவர்களது குடும்பத்தை பழிவாங்க நினைத்து பொய் சொல்வதாகவும் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பேசிய பிரபுவின் தாய் ஜெயந்தி “என் ஒரு மகனை கொன்றுவிட்டு பழியை என் இன்னொரு மகன் மீது போடா பார்க்கிறார் அவருக்கு வேறு யாரோ உதவி இருக்கிறார்கள் அவரை போலீசார் கண்டுபிடித்து என் மகன் சரவணன் குற்றம் அற்றவன் என்று அவனை விடுவிக்க வேண்டும்” என கூறியுள்ளார். மனைவியே கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.