rajesh and bindu (கொலை செய்தவர் மற்றும் கொல்லபட்டவர்)  
க்ரைம்

“அண்ணியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த வாலிபர்” - நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து.. அதிகாலையில் சடலமாக கிடந்த அண்ணன்!

பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர் மீண்டும் ஜார்க்கலட்டிக்கு திரும்பி வந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக அவரது தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அடுத்த ஜார்க்கலட்டி கிராமத்தில் சங்கரனுக்கு சொந்தமான சாமந்தி பூ தோட்டம் உள்ளது. இங்கு உத்தரபிரதேச மாநிலம் பாபூரி தார்தே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பிண்டு, தனது மனைவி பிரபாவதி (30) மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்துள்ளார். அவர்களுடன் பிண்டுவின் தம்பியான 20 வயதுடைய ராஜேஷ் என்பவரும் தங்கி கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிண்டுவின் மனைவி பிரபாவதிக்கும் அவரது தம்பி ராஜேஷும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு பிண்டு தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர் மீண்டும் ஜார்க்கலட்டிக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, பிண்டுவுக்கும் அவரது தம்பி ராஜேஷுக்கும் இடையே மதுபோதையில் கடுமையான தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

பிண்டுவின் மனைவி அவரது குழந்தைகளுடன்

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் கத்தியால் பிண்டுவின் மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. கத்திக்குத்தில் காயமடைந்த பிண்டு, காயங்களுக்கு தானே மருந்து போட்டுக்கொண்டு பின்னர் தூங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் காலையில் அவர் மூச்சு, பேச்சின்றி கிடந்துள்ளார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பிண்டுவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிண்டு ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாவித்திரி தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிண்டுவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கூறப்படும் அவரது தம்பி ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தம்பி அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்