சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருபவர் 14 வயது சிறுவன். இவருடன் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய லியோ மற்றும் 30 வயதுடைய நவீன் என்பவர்கள் நட்பு ரீதியாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே மாணவர் அவ்வப்போது அவர்களுடன் சென்று விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதுபோல கடந்த இரண்டு நாட்களாக பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் சிறுவன் வெளியில் சென்று தனது நண்பர்களுடன் விளையாடிவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது சிறுவனுக்கு உடல் நலம் பாதிப்பு இருந்த நிலையில் அதனை கவனித்த பெற்றோர்கள் அவரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சிறுவன் தன்னுடன் தினமும் பேசி பழகி வந்த அதே பகுதியை சேர்ந்த லியோ மற்றும் நவீன் ஆகியோர் விளையாடுவதற்கு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் லியோ (20), மற்றும் நவீன் (30) ஆகிய இருவரும் சிறுவனை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டது உறுதிசெய்யப்பட்டது. எனவே போலீசார் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.ஏற்கனவே நவீன் இதே போன்ற செயலில் ஈடுபட்ட நிலையில் அப்பகுதி மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
ஆனால் அப்போது கெங்கவல்லி காவல்நிலைய காவலர்கள் சரியாக விசாரணை நடத்தாமல் நவீன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அறிவுரை சொல்லி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. எனவே அப்போதே முறையாக விசாரணை நடத்தி இருந்தால் தற்போது மீண்டும் ஒரு சிறுவன் பாதிப்படையாமல் தடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 14 வயது சிறுவனுக்கு அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அக்கம் பக்கத்தினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்