க்ரைம்

“பள்ளி மாணவியை காதலித்த திருமணமான இளைஞர்” - கட்டையால் அடித்தும் இருசக்கர வாகனத்தை ஏற்றியும் கொலை செய்த தந்தை!

தகவல் அறிந்து வந்த வாலிபர் வடிவேலனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்த சங்கரை வெளியே விட...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய வடிவேலன். இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணுடன் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே வடிவேலன் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அதே போல் களம்பூர் அருகே உள்ள முக்குறும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதுடைய சங்கர் இவரது மகள் களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சங்கரின் மகளுக்கு வடிவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியுடன் வடிவேல் நட்பாக பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. எனவே பள்ளிக்கு செல்லும் மாணவியை வடிவேலன் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை சங்கருக்கு உறவினர்கள் தெரிவித்த நிலையில் முதலில் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த மாணவியை கண்டித்த சங்கர். பின்னர் “தனது மகள் படிக்கவேண்டும் எனவே அவளை தொந்தரவு செய்யாமல் விலகி விடு” என்று வாலிபர் வடிவேலனை எச்சரித்துள்ளார்.

இதை கண்டுகொள்ளாமல் வடிவேலன் தொடர்ந்து மாணவியிடம் பேசிவந்துள்ளார் இதனால் வடிவேலன் மீது சங்கருக்கு கோபம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அனந்தபுரம் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடிவேலன் வேலைக்காக களம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது முக்குறும்பை பகுதியில் வாலிபர் வடிவேலனை சங்கர் வழிமறித்து “உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாது” என்று கூறி வடிவேல் தலை மீது ஓங்கி கட்டையால் அடித்துள்ளார்.

இதில் துடிதுடித்து கீழே விழுந்த வடிவேலன் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்தும் ஆத்திரம் அடங்காத சங்கர் துடிதுடித்த வடிவேலன் மீது இரு சக்கர வாகனத்தை இரண்டு முறை ஏற்றி இறக்கி உள்ளார். இதனைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூச்சலிட்டது தொடர்ந்து அடித்த கட்டையுடன் சங்கர், களம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வடிவேலனை அப்பகுதியினர் மீட்டு களம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வடிவேலன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த வாலிபர் வடிவேலனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்த சங்கரை வெளியே விட வேண்டும் என்று கூறி ஆரணி திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

எனவே ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனாலும் இறந்த வடிவேலன் உறவினர்கள் களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் களம்பூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.